www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

தகவல் தொழில் நுட்பம்

இந்தியா பூஜ்யமல்ல

-கணியன் : திசைகள்-

பிகார் என்றதும் உங்கள் மனதில் என்ன சித்திரம் தோன்றும்? லாலு-ராப்ரி? ஜாதி சண்டைகள்? கடத்தப்படும் குழந்தைகள்? கால்ந்டைத் தீவனம்? வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 'நாகரீகமற்ற' ஏழை இந்தியர்கள்?

நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று பீகாரில் நடந்து வருகிறது. பட்வா டோ லி என்பது பீகாரில் உள்ள ஒரு கிராமம். அந்த ஒரு கிராமத்திலிருந்து மட்டும் இதுவரை 100 பேர் ஐ.ஐ.டிகளில் சென்று சேர்ந்திருக்கிறார்கள். (ஆம். ஐ.ஐ.டிகளில்!) ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சற்று கூர்ந்து பார்த்தால் அது ஒன்றும் ஆச்சரியமாகத் தோன்றாது. ஏனெனில் அங்கு ஐஐடியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கென்றே ஒரு அமைப்பு 'சிஸ்டமாடிக்'காக செயல்பட்டு வருகிறது.அதை ஐஐடி பட்டதாரிகள், மாணவர்களே நடத்துகிறார்கள்.அது காசுக்கு நடத்தப்படும் கல்வித் தொழிற்சாலை அல்ல. அது ஒரு தன்னார்வத் தொண்டு.

ஜிதேந்திர குமார் என்ற அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு 1991ம் ஆண்டு ஐஐடியில் இடம் கிடைத்தது. படித்து முடித்த பிறகு 1997ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஐஐடியில் இடம் கிடைக்க உதவி செய்தார். இப்போது அந்த மாணவர்கள் அடுத்தவர்களுக்கு கை கொடுத்து வருகிறார்கள்.

இது பற்றி வீக் வார இதழ் தனது நவம்பர் 24 2002 இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கிடைத்தால் படித்துப் பாருங்கள், மெய் சிலிர்க்கும்.

நுழைவுத் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற பட்டிமன்றச் சண்டைகளை அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டு, நம் ஐஐடி-யர்களும் இது போன்ற முயற்சிகளில் இறங்கினால் இரண்டு இந்தியாக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்துவிடாதா? பிகாரிலேயே இது சாத்தியம் என்றால் இங்கு நடக்காதா?

உயிரைக் காப்பாற்றிய மின்னஞ்சல்

வெங்கடாசலபுரத்தில் வசித்து வந்த அந்த ஏழைத் தம்பதியின் குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது. இதயத்தில் பிரசினை. அறுவைச் சிகிச்சை நடத்தினால் காப்பாற்றிவிடலாம், இல்லையென்றால்... என்று டாக்டர்கள் அறிவித்துவிட்டார்கள். அவர்கள் சுலபமாக சொல்லிவிட்டார்கள். ஆனால் பணத்துக்கு எங்கே போவது? ஏழைத் தம்பதிகள் வீடு வீடாக ஏறி இறங்கினார்கள். அறிவுரைகள் நிறையக் கிடைத்தன. ஆனால் போதுமான பணம் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்த அறிவுரைகளில் ஒன்று அரசாங்கத்திற்கு விண்ணப்பியுங்களேன். அவர்களிடத்தில் இது போன்ற இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவ ஒரு திட்டம் இருக்கிறது என்பது. அவர்கள் மனுப்போட்டார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.

விதியை நொந்து கொண்டு விரக்தியின் விளிம்பில் இருந்த அவர்கள் தற்செயலாக ஒருநாள் முருகேசன் என்ற இளைஞரை சந்தித்தார்கள். முருகேசன் அந்த கிராமத்தில் 'சிராக்' என்ற ஒரு கணினி மையம் நடத்தி வருகிறார். முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு பிரிவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். சூழ்நிலையின் தீவிரத்தையும் அவசரத்தையும் விவரித்தது மின்னஞ்சல். என்ன ஆச்சரியம்! மூன்று நான்கு நாட்களுக்குள் அரசு அதிகாரிகள் வெங்கடாசல்புரத்திற்கு வந்து விட்டார்கள். விபரம் உண்மைதானா என்று விசாரித்து அறிந்து கொண்டார்கள். நாட்டாமையை சாட்சி வைத்துக் கொண்டு உதவி அளித்தார்கள். குழந்தை கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து குழந்தை பிழைத்து விட்டது. இப்போது வெங்கடாசலபுரம் புழுதியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.!

தட்டம்மை ஒழிக!

புளியம்பட்டியில் 2002ம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென்று தட்டம்மை ( chicken pox) பரவத் தொடங்கியது. இரண்டு மூன்று வாரத்தில் கிடுகிடுவென்று பரவி 200 பேரைத் தாக்கியது.ஊர் மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அந்த ஊரில் இருந்த கணினி மைய இளைஞர் வட்டார வலர்ச்சி அதிகாரிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் 'அவசரம்' என்று போட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். பக்கத்து மாவட்ட மருத்துவ மனையிலிருந்து மருத்துவர்களும், செவிலியர்களும் வந்தனர். வீடூ வீடாகச் சென்று மருந்து கொடுத்தனர். தடுப்பூசி போட்டனர். ஒவ்வொரு நோயாளியின் ரத்தமும் சோதிக்கப்பட்டது.உரிலிருந்த தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டு வாரத்தில் அந்த ஊரிலிருந்து முற்றிலுமாக தட்டமை ஒழிக்கப்பட்டுவிட்டது.

அம்மாடி!

மதுரைக்கு அருகில் உள்ள மேலூர் தாலுகாவில் இருக்கிறது உலகப் பிச்சான்பட்டி. 2001ம் ஆண்டு அந்த ஊரில் பயிரிடப்பட்ட வெண்டைக்காய் செடிகள் முழுவதும் பலன் ஏதும் தராமலேயே அழிந்து போயிற்று. காசும் உழைப்பும் நஷ்டமாயிற்றே என்று இடிந்து போய்விடாமல் அந்த கிராம விவசாயிகள் மறு வருடமும் வெண்டையே பயிரிட்டார்கள். அடுத்தவருடமும் அதே நிலை.

அந்த சிறு கிராமத்தில் 18 வயதுப் பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி ஒரு கணினி மையம் வைத்திருந்தார். அவர் மதுரை வேளாண்மைப் பல்கலைக் கழத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து, நோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் படம் எடுத்து அனுப்ப முடியுமா என்று கேட்டு பதில் வந்தது. தன் மையத்தில் இருந்த வெப் கேமிராவைப் பயன்படுத்தி அந்தப் பெண் நோய்தாக்கப்பட்ட செடியைப் படம் எடுத்து அனுப்பி வைத்தாள். அந்தப் படத்தைப் பார்த்ததுமே விஞ்ஞானிகளுக்கு விஷயம் விளங்கி விட்டது. செடிகளைத் தாக்கியிருப்பது 'மஞ்சள் புள்ளி நோய்' என்பது. அதை போரான், திரவ நைட்ரஜன் கலவை கொண்டு அடித்துத் துரத்த முடியும் என்று அவர்கள் விளக்கமாக அந்தப் பெண்ணுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அடுத்த நாளே விவசாயிகள் களத்தில் இறங்கினார்கள். அந்தப் பெண்ணால் அந்த ஆண்டு காப்பாற்றப்பட்ட பயிரின் மதிப்பு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய்!

விழிப்புணர்வு பெற்ற உறங்கான்பட்டி

உறங்கான்பட்டியும் மதுரை மாவட்டத்தில்தான் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் கட்டிட வேலைக்குப் போனார். போன இடத்தில் வேலை செய்கிற இடத்தில் ஏற்பட்ட சிறு விபத்தில் உயிரிழந்தார். இங்கே உறங்கான்பட்டியில் உள்ள அவர் மனைவிக்குத் தலையில் இடி இறங்கியது போல இருந்தது.காசு பணம் இல்லை என்றுதானே சம்பாதிக்கப் போனார். போன இடத்தில் இப்படி ஒரு கொடுமையா? அவரது முதலாளியிடம் நஷ்ட ஈடு கேட்கலாம் என்று யாரோ யோசனை சொன்னார்கள். எங்கே போய்க் கேட்பது? யாரைப் போய் கேட்பது? அந்தப் பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் வயதுக்கு வந்த பின் வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை. யாரோ ஒருவர் அவரை அருகிலிருந்த கணினி மையத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கிருந்த இளைஞர் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். சில நாட்கள் கழித்து அங்கிருந்து பல காகிதங்கள் அடங்கிய பொட்டலம் ஒன்று வந்தது. அவற்றை நிரப்பிக் கையெழுத்திட்டு அனுப்புமாறு அத்துடன் இருந்த கடிதம் சொல்லிற்று. பார்சல் கிடைத்தது, ஒருவாரத்தில் எல்லா படிவங்களையும் அனுப்பி வைக்கிறோம் என்று கணினி மையம் இளைஞர் பதிலனுப்பினார்.மின்னஞ்சல் மூலம்தான். படிவங்கள் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பின்னர் சவுதியிலிருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வந்தது. இதைப் பெற ஆன செலவு வெறும் 30 ரூபாய் மட்டுமே!

கம்பியில்லை தம்பி

இவையெல்லாம் கதை அல்ல. உண்மைச் சம்பவங்கள். இதில் கணினி மையம் என்று குறிப்பிடப்படுவது சிராக் என்ற அமைப்பு நடத்தும் கணினி மையங்கள். இந்தக் கணினி மையங்கள் இந்தியா முழுக்க நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள என்லாக் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (n-Logue Communications Pvt Ltd) என்ற நிறுவனம் இந்த கிராமக் கணினி மையங்களை நிறுவி வருகிறத்து/ இவை இணைய இணைப்புக்காக தொலைபேசியை நம்பியிருப்பதில்லை. கோர்டெக்ட் (corDECT) என்ற கம்பியில்லா (wireless) தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்குகின்றன.

இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அசோக் ஜுன்ஜுன்வாலா என்ற ஒரு மாமனிதர். சென்னை ஐஐடியில் மின்சாரப் பொறியியல் (Electrical Engineering) துறைப் பேராசிரியர்.இந்தியாவில் உள்ள 64 லட்சம் கிராமங்களைக் கணினி மூலம் இணைக்க வேண்டும் என்பது இவரது கனவு.ஆண்டுகு 20 ஆயிரம் கிராமங்களை எளிதாக இணைக்கலாம் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
இந்த சிராக் மையங்களில், சிடிராம், மல்டிமீடீயாவுடன் கூடிய ஒரு கணினி, ஒரு வெப் காமிரா, பிரிண்டர், ஒலிபெருக்கி, மைக், நான்கு மணி நேரம் தாக்குப்பிடிக்கக் கூடிய UPS, இவற்றோடு சுவரில் மாட்டக் கூடிய கோர்டெக்ட் செட், இவையெல்லாம் இருக்கும்.

இந்தக் கணினி மையங்கள் ஒரு உள்ளூர் சேவை வழங்குநருடன் (Local service provider -LSP) இணைக்கப்படுகின்றன. அங்கு ஒரு DIU சுவிட்ச். அந்த LSPக்கள் பி.எஸ்.என்.எல். அல்லது டாடா, அல்லது ரிலையன்ஸ் சேவைகளுடன் இணைக்கப்படுகின்றன. ஒரு LSP 25 கீ.மி தூரத்திற்கு சேவை வழங்க முடியும். கோர்டெக்ட் தொழில் நுட்பம் 35kbps 70 kbps என்ற இரண்டு வேகங்களில் இணைப்பு வழங்குகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதை வைத்துக் கொண்டே வீடியோ கான்பெரன்சிங் போன்ற தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். வீடியோ கான்பெரன்சிங் நடத்த 128 kbps இணைப்பு வேண்டும். ஆனால் இவர்கள் தரவுகளை நெருக்கி (compress) செய்து அனுப்புவதால் இது சாத்தியமாகிறது என்கிறார்கள்.

நீங்கள் மேலே உள்ள சம்பவங்களில் பார்த்த கணினி மைய இளைஞர்/ இளம் பெண் இவர்களெல்லாம் பத்தாம் வகுப்புத் தேறியவர்கள். ஐந்துவாரம் பயிற்சி. பயிற்சிக் கட்டணம் வெறும் முன்னூறு ரூபாய்.

ஓசையில்லாமல் ஒரு புரட்சி

இந்தியாவில் இது போல பல புரட்சிகள் சத்தமில்லாமல் கிராமப் புறங்களில் நடந்து வருகின்றன.

சென்னையில் உள்ள எம்.எஸ். சாமிநாதன் அறக்கட்டளை, கனடாவில் உள்ள இன்டெர்நாஷனல் டெவலப்மெண்ட் ரிசர்ச் சென்டர் (IDRC) என்ற அமைப்போடு சேர்ந்து பாண்டிச்சேரி அருகில் மீனவர்களுக்கான கணினி மையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

குஜராத்தில் உள்ள அமுல் கூட்டுறவு அமைப்பு பால்வளப் பொருட்களுக்காக 'டிஸ்க்' (Dairy Information System Kiosk -DISK) என்ற ஒரு வலைப்பின்னலைத் துவக்கியிருக்கிறது. 2500 கிராமங்கள் இணைகப்பட்டுள்ளன. அந்தக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களான 70 ஆயிரம் பால் கூட்டுறவுச் சங்கங்களையும் இணைக்காமல் ஓய்வதில்லை என்று அது களம் இறங்கி இருக்கிறது.

அசோக் ஜுன்ஜுன்வாலா, அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள MIT மிடியா லாப். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்மென் சென்டர், ஐசிஐசிஐ வங்கி எல்லோருமாக இணைந்து 'சாரி' (Sustainable Access in Rural India -SARI) என்ற வலைப் பின்னலை மதுரை மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த இணைப்பின் ஒரு முக்கிய பலன், இது மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இதனால் கண்ணில் ஏற்படும் பிரசினைகளை, டெலிமெடிசின் உத்திகளைப் பயன்படுத்தி, ஆரம்பகட்ட ஆய்வுகளை நடத்துகிறார்கள். அவசியம் இருந்தால் ஒழிய இந்தப் பகுதி கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்குப் போக வேண்டியதில்லை.

சென்னையில் உள்ள பாரி நிறுவனம் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளுக்காக ஒரு வலைப்பின்னலை நடத்தி வருகிறது.


வைஃபி ( WiFi) என்பது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டுவரும் 'பணக்கார' தொழில்நுட்பமாக இருக்கலாம். ஆனால் கான்பூர் ஐஐடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மீடியா லாப் ஆசியா கான்பூரிலிருந்து லக்னோ வரை 75 கி.மீக்கு ஒரு வைஃபி தாழ்வாரத்தை உருவாக்கி இருக்கிறது. சாதாரணமாக வைஃபி 300 மீட்டர் சுற்றளவு வரைதான் எடுபடும். ஆனால் நம் கான்பூர் ஐஐடி ஆட்கள் சில ஆன்டெனாக்கள், ஆம்பிளிபையர்கள் இவற்றைக் கொண்டு அதை 35 கீமிக்கு நீட்டிவிட்டார்கள். குரல்வழித் தரவுகளை (voice data) பயன்படுத்த முடிகிறது, படங்கள் வீடியோக்களை அனுப்புவது சிரமம் என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள்.

ரிக்ஷாவில் கணினி மையம்

கான்பூர் ஐஐடிக்காரர்கள் இன்னொரு வேலையும் செய்திருக்கிறார்கள். அது நடமாடும் கணினி மையம். இன்போ தேலா (info thela) என்ற இந்தக் கணினி மையம் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் அமைக்கப்பட்டிருக்கும். இணையத்தை தொடர்பு கொள்ள கம்பியில்லா இணைப்புத் தொழில் நுட்பம். (wireless technology) கணினிக்கு மின்சாரம் தரும் கலன்கள் (பாட்டரிகள்) ரிக்ஷாவை தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக மிதித்துக் கொண்டு போகும் போது 'சார்ஜ்' பெறும்.

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க

இவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிவரும் முயற்சிகள். ஆர்வமே பிரதானமாகக் கொண்டு நடைபெறும் முயற்சிகள். ஆனால் அதற்குள் அவற்றின் பலன்களை பன்னாட்டு நிறுவனங்கள் மோப்பம் பிடித்துவிட்டன. தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இந்தக் கிராமக் கணினி மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று இந்துஸ்தான் லீவர் போன்ற நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக கேள்வி.

அசோக் ஜுன் ஜுன் வாலாவின் கனவு மட்டும் நிறைவேறிவிட்டதென்றால், அதாவது இந்தியாவில் உள்ள 65 லட்சம் கிராமங்கள் இணைய உலகத்தோடு இணைக்கப்பட்டுவிட்டால் அதன் மூலம் மருத்துவம், வேளாண் அறிவியல், வானிலை, சந்தை பற்றிய நிலவரங்கள் மட்டுமல்ல, கல்வியைக் கூட கொண்டு சேர்த்துவிடலாம். அது நடந்தால் இந்தியா இன்றிருப்பதை விட பல நூறு மடங்கு வலிமை கொண்ட ஒரு தேசமாக எழுந்து நிற்கும்.

கனவு மெய்ப்படுமா?

அனுப்பியவர் வெப்தமிழன்

உங்கள் கணியைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

-திசைகள்-

உங்கள் கணினியின் இயங்கு தளம் விண்டோ ஸ் 98 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், சில எளிய நடவடிக்கைகள் மூலம் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.இந்த நடவடிக்கைகள் ஒன்று இரண்டு மூன்று என எண்ணுவது போல எளிதானது என்று சொல்லும் மைக்ரோசாஃப்ட், அவற்றைத் தமிழில் தனது தளத்தில் விவரித்திருக்கிறது. ஆம் தமிழில்!

அது மட்டுமல்ல, பல தொழில்நுட்பத் தகவல்கள், தொகுப்பு வரிசை எனப்படும் Colation பற்றிய அறிமுகம், அது தொடர்பான சில மயக்கங்கள் போன்ற பொருட்களில் கட்டுரைகள் காணப்படுகின்றன.

உங்களுக்குத் தொழில்நுட்பம் தேவை இல்லை எனில், வினாடி வினா போன்ற விளையாட்டுக்கள், சில வெற்றிக் கதைகள், துணுக்குகள் இவற்றைப் படிக்கலாம்.

வினாடி வினாக்கள் நடத்துவதற்குப் பெயர் பெற்ற ஓபிராயனுடன் சேர்ந்து வெப்துனியா நடத்தும் வினாடி வினா நடத்தும் போட்டிக்கான இணைப்பையும் இங்கு காணலாம். இந்த வினாடி வினாவில் தமிழிலும் பங்கு கொள்ளலாம். எட்டு வாரங்கள் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் பரிசு பீன்ஸ்டாக் கணினி.

மைக்ரோசாப்ட்டின் பாஷா இந்தியா முயற்ச்சிகளில் ஒன்றான இந்த இணையதளத்தை ஆறாம் திணை இதழின் முன்னாள் ஆசிரியர் திரு.அப்பண்ணசாமி கவனித்துக் கொள்கிறார்.
இணையதள முகவரி:
http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta

அனுப்பியவர் வெப்தமிழன்

தமிழ் கையெழுத்துணரி

( Tamil Handwriting Recognising Software) By M.Mauran, Eelam

இதோ தமிழ் கையெழுத்துணரி

தமிழுக்கான கையெழுத்துணரி ஒன்றினை வடிவமைக்கும் நோக்கில் இணையத்தை துருவியபோது சற்றே பிரயோசனப்படுத்தக்கூடிய VB செய்நிரல் ஒன்று கிடைத்தது.
ஒருவார முயற்சிக்குப்பின்னர் அச்செய்நிரலினை மேலும் சீர்படுத்தி தமிழ் கையெழுத்துணரி ஒன்றினை வடிவமைத்துள்ளேன்.
மூல செய்நிரல் vb 6 அமைப்பில் இருந்ததாலும். என்னிடம் vb.net இறுவட்டுக்கள் கைவசமில்லாததாலும். இச்செயலியை vb 6 இலேயே வடிவமைக்கவேண்டியதாகிற்று.
இதனால் ஏற்பட்ட பின்னடைவு, இச்செயலி யுனிகோட் எழுத்துக்குறிமுறையிலில்லாமல் திஸ்கி குறிமுறையிலேயே இயங்குகிறது.



இடைமுகப்பு வடிவமைப்பில் சற்றே காலத்தை செலவிட்டு கூடுமானவரைக்கும் எமக்கான இடைமுகப்பு பாரம்பரியம் ஒன்றினை உருவாக்க முனைந்துள்ளேன்.(மேற்கின் இடைமுகப்புப் பாரம்பரியத்தை அப்படியே பின்பற்றுவதால் ஏற்படும் உறுத்தல்களோடு எனக்கு உடன்பாடில்லை)
windows xp cleartype font அமைப்பில் இந்த இடைமுகப்பின் முழுமையான அழகினை அனுபவிக்கலாம்.
வின்டோஸ் இயக்குதளத்திற்கான இச்செயலியினை நீங்கள் இலவசமாக இணையத்திலிருந்து இறக்கி பார்வையிடலாம்.
இது வெறும் காட்சிப்படுத்தலுக்கான செயலி என்பதால் இதிலிருந்து உருப்படியான எந்த பயன்பாட்டையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.
வேண்டுமானால் சின்னப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தலாம்.
இதனை மேலும் மேலும் பயிற்றுவிப்பதன்மூலம் துல்லியமாக இயங்கவைக்கலாம்.இதனை பார்வையிடும் உங்களிடம் பின்வரும் வேண்டுகோள்களை முன்வைக்கிறேன்.

1. தயவுசெய்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டு இச்செயலியின் மூலச் செய்நிரலினை (ஆணைமூலம்?) பெற்றுக்கொள்ளுங்கள். mmauran@gmail.com

2. இதனை யுனிகோட் குறிமுறையை கையாளக்கூடியவாறு மாற்றியமையுங்கள். (vb.net பிரயோசனப்படக்கூடும்)

3. இதன் அடிப்படைகளைப் பயன்படுத்தியோ அல்லது வேறு மொழிகளைப்பயன்படுத்தியோ இதன் செயல்பாடுகளை மேம்படுத்துங்கள்.

4. கையால் எழுத, அதனை உணர்ந்து உரைச்செயலி ஒன்றில் அச்சிடுமாறு செய்யுங்கள். (அதுதானே இலக்கு?)

5. இது மிக மிக முக்கியம். நீங்கள் மேம்படுத்திய செயலியினை இலவசமாக விநியோகிப்பதோடு அதன் மூல செய்நிரலினையும் இலவசமாக வழங்குங்கள்.


தமிழ் உரைச்செயலிகளுடன் இணைப்பதற்கான தரமான கையெழுத்துணரி இந்தவருடமே உங்களிடமிருந்து வந்துவிடுமா?

M.Mauran.

Click here to Download the Software ( Beta Version )[ 169 KB (173,791 bytes)

Download URL: http://www.sooriyan.com/Tamil_text_Recognition.zip


அனுப்பியவர் வெப்தமிழன்

தமிழ் இணையம் 2004- கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

-உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் ஆகஸ்ட் 16, 2004-

டிசம்பர் 11,12 தேதிகளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள தமிழ் இணையம் மாநாட்டிற்கான கட்டுரைகளை வரவேற்று உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநாட்டை உத்தமம், சிங்கப்பூர்த் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுவோடும் வேறு சில அமைப்புகளோடும் சேர்ந்து நடத்துகிறது.

இந்த மாநாட்டில் அளிக்கப்படும் கட்டுரைகளை வரவேற்கவும், பரிசீலிக்கவும், மாநாட்டு நிகழ்ச்சி அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முனைவர் கு.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து) இந்தக் குழுவின் தலைவராகவும், திரு. அருண் மகிழ்நன் (சிங்கப்பூர்) துணைத்தலைவராகவும், திரு. மாலன் (இந்தியா), திரு. அ. இளங்கோவன் (இந்தியா), திரு. தொ. சிவராஜ் (இந்தியா) முனைவர். வாசு ரங்கநாதன் (அமெரிக்கா) ஆகியோர் அதன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இணையப் பல்கலைக்கழத்தின் இயக்குநர் முனைவர். பேரா. வி. சங்கரநாராயணன் குழுவின் ஆலோசகராக இருக்க இசைந்துள்ளார்.

இதுவரை நடந்துள்ள மற்ற மாநாடுகளிலிருந்து இந்த இணைய மாநாடு சற்றே வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான, ஆழமான விவாதங்களுக்கு இடமளிக்கும் வகையில், அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநாட்டுப் பேராளார்கள் அனைவரும் எல்லா அமர்வுகளிலும் பங்கேற்க ஏதுவாக ஒரு நேரத்தில் ஒரு அமர்வு மட்டுமே நடைபெறும்.

"நாளைய உலகில் தமிழ்த்தகவல் தொழில் நுட்பம்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு அது தொடர்பான அனைத்து பொருள்களிலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. செப்டம்பர் 16ம் தேதிக்குள், இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளின் சுருக்கம் மாநாட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். நவம்பர் 16ம் தேதிக்குள் முழுக் கட்டுரையும் அனுப்பப்பட வேண்டும். கட்டுரைச் சுருக்கங்கள் பரிசீலிக்க உதவும் வகையில் தெளிவாகவும், கட்டுரையின் பொருள் குறித்த அனைத்துத் தகவல்களும் கொண்டிருப்பதாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைச் சுருக்கங்கள் துறைசார்ந்த வல்லுநர்களால் பரீசிலிக்கப்பட்டு தகுதியுள்ளவை ஏற்கப்படும். தேர்வு முடிந்தவுடனேயே, ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டுரையாளர்களுக்கு முடிவு தெரிவிக்கப்பட்டுவிடும்.

கட்டுரைகள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, அல்லது இரு மொழிகளிலுமோ அமைந்திருக்கலாம். கட்டுரைகள் மின் வடிவில் இருத்தல் அவசியம். தமிழில் சுருக்கங்கங்களை அனுப்புவோர், டாப் (TAB) அல்லது தகுதரம் 1.7 (TISCII 1.7) குறிமுறைகளில் அமைந்த எழுத்துருக்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த குறி முறைகளைப் பயன்படுத்த இயலாதவர்கள், jpeg/gif போன்ற காட்சிப் படிமங்களாகக் கட்டுரைகளை அனுப்பக் கோருகிறோம். கட்டுரைச் சுருக்கங்களில் அதனை எழுதியவர் பெயர், பணி விவரங்கள், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரைகளை அனுப்புபவர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என மாநாட்டின் அமைப்பாளர்கள் விரும்புகிறார்கள். மாநாட்டில் அளிக்க ஏற்றுக் கொள்ளப்படும் கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு, இலவசமாக இரு நாட்களுக்குத் தங்குமிடம், உணவு, மாநாட்டின் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு இவற்றை அளிக்க சிங்கப்பூர் மாநாட்டு அமைப்புக் குழு முன் வந்துள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே மாநாட்டில் வாசிக்கப்படும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்படும். உத்தமம் இணையதளத்தில் மின் வடிவில் பதிப்பிக்கப்படும். அதன் களஞ்சியத்தில் சேமிக்கப்படும். இவற்றிற்கான உரிமைகள் உத்தமம் அமைப்பிற்குரியன.

உங்கள் வசதிக்காக முக்கியத்துவம் வாய்ந்த நாள்களை மீண்டும் குறிப்பிடுகிறோம். அவற்றை நினைவில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்:

கட்டுரைச் சுருக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: செப்டம்பர் 16, 2004

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முழுமையான இறுதி வடிவம் வந்து சேர வேண்டிய தேதி: நவம்பர் 16, 2004

மாநாட்டு நாள்கள்: டிசம்பர் 11, 12, 2004

உங்கள் கட்டுரைச் சுருக்கங்களை ti2004-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இயன்ற விரைவில் அனுப்பி வையுங்கள். உங்கள் ஒத்துழைப்பையும், தமிழ் இணையம் மாநாட்டில் உங்கள் பங்கேற்பையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்

அன்புடன்,
கு.கல்யாணசுந்தரம்
தலைவர்
மாநாட்டு நிகழ்ச்சி அமைப்புக் குழு
தமிழ் இணையம் 2004
http:/www.infitt.org/ti2004/

தமிழ் இணைய மாநாட்டில் விவாதிக்க ஏற்ற பொருள்களில் சில (பட்டியல் முழுமையானதல்ல)

1.தமிழ் எழுத்துக் குறிமுறைகளின் தரங்கள்:

*16 பிட் அமைப்புக்கள், யூனிகோடின் இன்றைய நிலை, பயன்நிரல்களிலும், பணித் தளங்களிலும் அதன் இயைபுநிலை
*அடுக்கு வரிசை, வரிசை ஒழுங்கு இவை தொடர்பான பிரசினைகள்
*8 பிட்டிலிருந்து 16 பிட்டிற்கு மாறுவது தொடர்பான பிரசினைகள்
*யூனிகோடில் உள்ளிடுவதற்கேற்ற தமிழ் 99 விசைப்பலகை

2. பன்மொழிக் களப்பெயர்கள்

*தமிழை முன்னிலைப்படுத்தி, பன்மொழிக் களப்பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் குறித்த விவாதம்
*பன்மொழிக் களப்பெயர்களுக்கான கட்டுமானங்கள், உகந்த சூழல்கள், குறிமுறைகள், செயல்படுத்துதல் இவை தொடர்பான தொழில் நுட்ப விவாதங்கள்
*பயன்பாடு, பயனாளர் எண்ணிக்கை மற்றும் வீதம், இதில் உத்தமத்தின் பங்கு இவை குறித்த பொது விவாதம்

3.பன்மொழிச்சூழலில் தமிழ்

*மொழி வகைகள் (அகரவரிசையிலமைந்த மொழிகள், வரைமொழிகள், ஒலிசார்ந்த மொழிகள்) மற்றும் பன்மொழிச்சூழல்
*இந்திய மொழிச் சூழலில் இயைந்து வாழும் தமிழ்- இயங்கு தளங்கள், செயலிகள் குறித்த பிரசினைகள்
*மற்ற வரை மொழிகள், ஒலிசார்ந்த மொழிகள் இவற்றுடன் இயைந்து வாழ் நிலை. குறிப்பாகச் சீனம், சிங்களம், அரபி மொழிகள்

4.ஒளிவக் குறி உணர்தல், பொறிவழி மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்து சரிபார்த்தல், பேச்சு ஒலி உணர்தல்

*கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள்
*நெருடலான மற்றும் சிக்கலான பகுதிகள் ("செங்கொடி")
*தொழில்நுட்பம் மற்றும் மொழிசார்ந்த நிலைப்பாடுகள்
*இணையான முயற்சிகள்- ஆங்கிலம் தவிர்த்த மொழிகளோடு ஓர் ஒப்பாய்வு
*முன் வைக்கப்படும் தீர்வுகள்

5.கைத் தொலைபேசி, மற்றும் கைக் கணினிகளுக்கான தொழில்நுட்பங்கள்

*கைத் தொலைபேசி, கம்பியில்லா சாதனங்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள், களஞ்சியங்கள்
*பணித்தளம் மற்றும் பயன்பாட்டு நிலைகளில் தமிழைப் பயன்படுத்துவதில் உள்ள பிரசினைகள்
*கைத் தொலைபேசி விசைப்பட்டைகளில் தமிழை உள்ளிடுவதற்கான தரப்படுத்தல்
*கையெழுத்தை உணர்தல், தமிழ் வரிவடிவங்களுக்கான பரிசீலனைகள்
*தரவுப் பரிமாற்றங்கள், அகநிலை உருவகிப்பு இவற்றிற்கான எழுத்துக் குறிமுறைகள்

6.திறவூற்று மென்பொருட்கள், தமிழாக்கங்கள்

*தமிழ் திறவூற்று முயற்சிகள், தமிழ்-லினக்ஸ், தமிழ்-00.0, தமிழ்- மோசில்லா, இன்ன பிற
*மொழிபெயர்ப்பு மற்றும் தமிழாக்க முயற்சிகள்- சொற்தொகுப்புகள் வட்டார அமைப்புக்கள் - இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், மலேசிய தமிழ், சிங்கைத் தமிழ் இன்ன பிற
*தமிழாக்கத்திற்குத் தேவையான கருவிகள், தொழில்நுட்பங்கள்
*எதிர்காலத்திட்டங்கள்

7.கல்வித் தொழில்நுட்பம்

*மற்ற மொழிகளில் பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களோடு ஓர் ஒப்பாய்வு. ஆங்கிலம், இந்தி, சிங்களம், சீனம், மலாய் இன்ன பிற
*தமிழுக்கே உரிய தேவைகளைக் கண்டறிதல்
*தற்போது பயன்பாட்டில் உள்ளவற்றின் செயல்விளக்கம், அவற்றின் நோக்கங்கள், மேம்படுத்தலுக்கான பரிந்துரைகள்

8.தரவுதளம் சார்ந்த செயல்பாடுகள்

*பொதுநோக்கு மற்றும் வணிகச் பணிகள் சார்ந்த செயலிகள்
*16பிட் குறிமுறையில் அமைந்த தரவுதளங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் விதம்
*ஒழுங்கு வரிசையை நடைமுறைப்படுத்தல்
*பயன்பாடு குறித்த பிரசினைகள்: இணையம் தொடர்பானவை(வலைப்பூக்கள், வலைவாயில்கள், மின்னிதழ்கள், தகவல் அனுப்புதல், மின் வணிகம்) மேசைக்கணினி தொடர்பானவை

9.மின் அரசு

*மின் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களும் வாய்ப்புக்களும்
*பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த பிரசினைகள்
*பன்மொழிச் சிக்கல்கள்
* பன்மொழி கருவூலக் கட்டமைப்புகள், பன்மொழி PDF படிவம் உருவாக்குதல்/ நிரப்புதல்

அனுப்பியவர் வெப்தமிழன்

சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு

-மூலம்:சூரியன்.கொம்-
"நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம்" குறித்து விரிவாக விவாதிக்கும்
இந்த ஆண்டின் தமிழ் இணைய மாநாடு டிசம்பர் மாதம் 11,12 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனை தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வரும் உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.முத்து நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மொழிகளில் ஒன்று தமிழ். இன்று இணையத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய செயல்களில் பெரும்பாலனவற்றை- அநேகமாக அனைத்தையும்- தமிழ் மொழியைப் பயன்படுத்தியே செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியை மேம்படுத்தவும், தரப்படுத்தவும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 1997ம் ஆண்டு துவங்கி ஆண்டுதோறும் அனைத்துலக மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டு நடைபெற இருப்பது 7வது தமிழ் இணைய மாநாடு ஆகும்.

இந்த 7வது தமிழ் இணைய மாநாடு டிசம்பர் 11,12 தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இந்த அனைத்துலக மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுவது இது மூன்றாவது முறை.

"நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம்" என்ற பொருளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், தமிழ்த் தகவல் தொடர்பான பிரசினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. பலநாடுகளைச் சேர்ந்த சுமார் 50 கணினி வல்லுநர்களும், முன்னணிக் கணினி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்தத் தமிழ் இணைய மாநாடு இதற்கு முந்தைய மாநாடுகளிலிருந்து சற்று வேறுபட்டிருக்கும். தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்தின் வர்த்தக, சமூக பயன்பாடுகள் குறித்த விவாதங்களைக் குறைத்துக் கொண்டு, தொழில்நுட்ப அம்சங்களில் இந்த மாநாடு அதிகம் கவனம் செலுத்தும்.

"இரண்டாயிரமாவது ஆண்டு மிகப் பெரிய அளவில் தமிழ் இணைய மாநாட்டை சிங்கப்பூர் நடத்தியதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகள் பெரிய அளவிலேயே நடைபெற்று வருகின்றன. தொழில் நுட்பத்தை ஆழ்ந்து பரிசீலிக்கும் விதமாக முதன்முறையாக சிறிய அளவில் இப்போது சிங்கப்பூரில் மாநாடு நடக்க உள்ளது. தமிழ்த் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது எத்தனை முக்கியமோ அந்த அளவிற்கு மாறிவரும் தொழில்நுட்பங்களில் தமிழுக்கு உரிய இடம் கிடைப்பது குறித்து ஆராய்வதும் முக்கியமானது" என்று நெடுமாறன் தெரிவித்தார். "இந்த மாறுபட்ட வடிவத்தையும் சிங்கப்பூர்தான் அறிமுகப்படுத்த உள்ளது" என்றும் அவர் கூறினார்.

2004ம் ஆண்டிற்கானத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதற்குரிய அனைத்துலக அமைப்புக் குழு, சிங்கப்பூர் மாநாட்டுக் குழு ஆகியவற்றையும் உத்தமம் அறிவித்துள்ளது.

இந்த அனைத்துலக மாநாட்டை சிங்கப்பூரில் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிங்கப்பூர் மாநாட்டுக் குழுவின் தலைவர். திரு. அருண் மகிழ்நன், " சிங்கப்பூரில் தமிழ் இணைய மாநாடு நடைபெறும் போதெல்லாம் தமிழ் சமூகம் பலனடைகிறது. அனைத்துலகத் தமிழ் சமூகத்திற்கு நாமும் ஒரு சிறிய அளவில் உரிய பங்களிப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்தார்.

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், வாசிக்கப்படவுள்ள கட்டுரைகளுக்கான அறிவிப்பு, பேராளர் பதிவு, பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் ஆகியவை குறித்து உத்தமம் அமைப்பின் தலைமைச் செயலகம் அவ்வப்போது அறிவித்து வரும்.

தமிழ் இணைய மாநாடு குறித்த சில தகவல்கள்:

முந்தைய மாநாடுகள்
? 1997: சிங்கப்பூர்
? 1999: சென்னை
? 2000 சிங்கப்பூர்
? 2001 கோலாலம்பூர்
? 2002 சான்பிரான்சிஸ்கோ
? 2003 சென்னை

அனைத்துலக அமைப்புக் குழு

ஆலோசகர்கள்

பேராசிரியர். மு. ஆனந்த கிருஷ்ணன் (இந்தியா)
பேராசிரியர்: டான் டின் வீ (சிங்கப்பூர்)

தலைவர்: திரு.முத்து நெடுமாறன்

துணைத்தலைவர்: திரு. அருண் மகிழ்நன் (தலைவர் சிங்கப்பூர் மாநாட்டுக் குழு)

உறுப்பினர்கள்:
முனைவர்: கு.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து)
திரு. குமார் குமரப்பன் (அமெரிக்கா)
திரு. உ.ஜெயதீபன் (இலங்கை)
திரு. மாலன் (இந்தியா)

சிங்கப்பூர் ஏற்பாட்டுக் குழு:

ஆலோசகர்கள்: திரு.ரா. இரவீந்திரன் ( சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

திரு.த.இராஜசேகர் (தலைவர், தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு, சிங்கப்பூர்)

தலைவர்: திரு: அருண் மகிழ்நன்

துணைத் தலைவர்கள்:

திரு. நாராயணன் ஆண்டியப்பன்
திரு. அழகிய பாண்டியன்
திரு. தி.சு. மணியம்

உறுப்பினர்கள்:
திருமதி. தேவி பாலசுந்தரம்
திருமதி. ரமா சங்கரன்
திருமதி. மாலதி செல்வராஜு

அனுப்பியவர் வெப்தமிழன்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]